விபரீதமாகும் விபத்து -தண்டுவடத்தில் காயம் தடுப்பது எப்படி

விபரீதமாகும் விபத்து -தண்டுவடத்தில் காயம் தடுப்பது எப்படி
January 09 06:45 2023 by admin Print This Article

உலகளவில் ஒவ்வோர் ஆண்டும் 2.50 லட்சம் முதல் 5 லட்சம் பேர் வரை தண்டுவட காயங்களால் பாதிக்கப்படுகின்றனர். பெரும்பாலான தண்டுவட காயங்கள் சாலை விபத்துகள், கீழே விழுதல், வன்முறைச் சம்பவங்கள் போன்றவற்றால் ஏற்படுகின்றன. ஆனால், இவை அனைத்தும் தவிர்க்கப்படக் கூடியவையே.

மத்திய நரம்பு மண்டலத்தின் ஒரு பகுதியான தண்டுவடம், மூளை மற்றும் உடலின் பிற பகுதிகளை இணைக்கும் மிக முக்கியப் பணியைச் செய்கிறது. மூளையுடன் இணைந்து உடலின் இயக்கங்களைக் கட்டுப்படுத்துகிறது. இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த தண்டுவடத்தின் ஆரோக்கியம் பற்றிய விழிப்புணர்வு அவ்வளவாக இல்லை.

இந்தியாவில் ஒவ்வோர் ஆண்டும் 15,000 பேர் வரை முழுமையான தண்டுவடக் காயத்தால் அவதியுறுகின்றனர். முதுகுத்தண்டு, கழுத்து, இடுப்பில் அடிபட்டு முழுமையாக முடங்கிப் போகிறார்கள். இது தவிர தண்டுவட காயம் சார்ந்த பிரச்னைகளால் பலர் உயிரையும் இழக்கிறார்கள். அதனால் இது அரிதாக எங்கோ, யாரோ ஒருவர் மட்டும் சந்திக்கிற பிரச்னை அல்ல.

விபத்தில் கை, காலில் அடிபடுவது, எலும்புமுறிவு ஏற்படுவது போன்ற சிக்கல்களைச் சமாளித்து, குணப்படுத்தி, பின்னர் ஓர் இயல்பு வாழ்க்கைக்கு வர முடியும். ஆனால், முதுகுத்தண்டில் அடிபடுவது என்பது அப்படியல்ல. அது அந்த நபரின் அந்த குடும்பத்தின் வாழ்க்கையையே தலைகீழாக மாற்றிவிடக்கூடியது.

குறிப்பாக 90% விபத்துகளில் ஆண்கள் அதிலும் 20லிருந்து 40 வயது வரை

உள்ளவர்களே அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். இவர்கள் பெரும்பாலும் நடுத்தர அல்லது எளிமையான குடும்பங்களைச் சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். டூவீலரில் பயணிப்பவர்கள், மரம் ஏறுகிறவர்கள். கட்டுமானப் பணிகளில் ஈடுபடுகிறவர்கள்… இவர்கள்தாம் அதிக அளவில் தண்டுவடக் காயங்களுக்கு ஆளாகிறார்கள். இவர்கள் விழுந்ததைத் தொடர்ந்து ஒட்டுமொத்த குடும்பமே வறுமைக்கோட்டுக்குக் கீழே விழுந்துவிடுகிறது.

5% டைவிங், விளையாட்டுகளில் தண்டுவடம் காயமடைவது இருக்கிறது. இது தவிர, வழுக்கி விழுகிறவர்களுக்கும் தண்டுவட காயம் ஏற்படக்கூடும்.

இதுபோன்று காயமடைகிறவர்களுக்கு உடனே அவசர சிகிச்சை செய்வதற்கு இப்போது நிறைய வசதிகள் இருக்கின்றன. ஆனால், இந்த பிரச்னைக்கு அறுவைசிகிச்சை செய்வது மட்டுமே முழுமையான தீர்வை அளிக்காது. ஏனெனில் அடிபட்ட நரம்புத் தண்டுக்கு மீண்டும் உயிர் கொடுப்பது மிக மிக கஷ்டம். மூளையில் உள்ள அதே செல்கள்தாம் நரம்புத்தண்டுக்கும் வருகின்றன. என்னதான் அறுவைசிகிச்சை செய்தாலும், முழுமையான செயல்பாட்டுக்கு வர முடியாது. ‘ஹெல்மெட் போடுங்கள்’ என்று மீண்டும் மீண்டும் வலியுறுத்துவதற்குக் காரணமும் அதுதான். ஹெல்மெட் அணிந்தால் ஒரளவு பாதுகாப்பாவது கிடைக்கும்.

தொடர்புடைய வலைப்பதிவு: Types of Spinal Surgery

மறுவாழ்வு எவ்வாறு உதவும்?

முதுகுத் தண்டுவடத்தில் காயம் உள்ளவர்கள் நிரந்தர ஊனமுற்றவர்களாக இருப்பார்கள். இந்த காயங்களின் சிக்கலான தன்மையின் காரணமாக சிறப்பு சிகிச்சை, பராமரிப்பு, சேவைகள், உபகரணங்கள் ஆகியவை தேவைப்படுகின்றன.

தண்டுவட காயத்துக்குப் பின் சிதைந்துபோன குடும்பங்களையும், நோயாளியைக் கவனிக்க முடியாமல் விட்டுச் சென்ற துணையையும்கூட காண முடியும். ஒட்டுமொத்த குடும்பமே மனரீதியாகப் பாதிக்கப்பட்டிருக்கும் என்பதால், அவர்கள் எல்லோருக்கும் மனநல ஆலோசனையும் அளிக்கப்பட வேண்டும்.

கம்ப்யூட்டர் முன் அமர்ந்து வேலை செய்கிறவர்கள் வேண்டுமானால், அறுவைசிகிச்சைக்குப் பிறகு பழைய பணியை தொடர ஒரு வாய்ப்பு இருக்கிறது. மற்ற தொழிலாளர்களின் நிலைமையை யோசித்துப் பாருங்கள். அது மட்டுமல்ல… தண்டுவட பிரச்னையால் அவதிப்படுகிறவர்கள் கழிவறை செல்வதுகூட கடினமான செயல்தான்… இவர்களுக்கான நாப்கின் செலவைக்கூட பல குடும்பங்களால் சமாளிக்க முடியாது.

அது தவிர வாழ்நாள் முழுக்க இவர்கள் உடல்நலம் சார்ந்த பிரச்னைகளோடும், வலிகளோடும்தான் கழிக்க வேண்டியிருக்கும். நம் ஊரில் வீல்சேர் பயன்பாடும், அதற்கேற்ற கட்டிட அமைப்புகளும் மிகவும் குறைவு.

தண்டுவட அறுவைசிகிச்சை செய்துகொண்டவர்களுக்கும் மறுவாழ்வு சிகிச்சை (rehabilitation) அவசியம். மறுவாழ்வு மூலம் அவர்கள் புதிய திறன்களை வளர்த்துக் கொள்ளலாம். வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் வகையில் தங்களையும் தங்கள் குடும்பத்தையும் பயிற்றுவிக்கலாம்.

சென்னையில் இதற்காகவே பிரத்யேகமாக தொடங்கப்பட்ட சிகிச்சை மையம் ஹம்சா மூளை மற்றும் தண்டுவட மையம். இங்கு முதுகெலும்பு காயம், மூளை பாதிப்பு மற்றும் பக்கவாதம் ஆகியவற்றால் அவதியுறும் நோயாளிகளை குணப்படுத்துவதற்காக பல்வேறு நவீன சிகிச்சை முறைகள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த மையம் சென்னை மாநகரத்தின் மையப்பகுதியில் இருபது படுக்கை வசதிகளுடன் திறம்பட செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. இங்கு உடல் ரீதியான சிகிச்சை, தொழில்சார் சிகிச்சை, உளவியல் சிகிச்சை, பேச்சு சிகிச்சை மற்றும் பிற சமூக அடிப்படையிலான சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன. இதுபோன்ற இன்னும் பல மையங்கள் உருவாக வேண்டும்.

மறுவாழ்வு மையங்களில் ஒரு விரிவான, சிறப்பு வாய்ந்த மறுவாழ்வு சேவை வழங்கப்படும். விபத்து மற்றும் அறுவை சிகிச்சையினால் ஏற்படக்கூடிய காயங்களின் வலிகளில் இருந்து மீட்டெடுத்து அவரவர் வாழ்க்கையை சுதந்திரமாக வாழ உதவி புரியும். நோயாளிகளுக்கு திறன்கள், அறிவு மற்றும் தகவல்களை அளித்து சமூகத்துக்குள் அவர்கள் திரும்புவதற்கான வாய்ப்பை வழங்கப்படும்.

குறிப்பாக… மறுவாழ்வு மையங்கள் மூலம் தண்டுவட காயமடைந்த நோயாளிகளை உடல் ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் தயார்படுத்த வேண்டும். இதனால் குறுகிய காலத்தில் அவர்களின் நரம்பியல் மீட்பு மற்றும் பொது ஆரோக்கியத்தை அதிகரிக்க முடியும். நோயாளிகள் முடிந்தவரை சுதந்திரமாகவும் உற்பத்தித் திறனுடனும் வீடு திரும்ப ஏற்பாடு செய்ய வேண்டும். தங்கள் வாழ்க்கையை மீண்டும் தொடங்க தயாராக இருக்க வேண்டும் என்பதுதான் மறுவாழ்வு மையங்களின் இலக்காக இருக்க வேண்டும். வாழ்க்கை மீதான நம்பிக்கையை அளிக்கவும், பாதிக்கப்பட்ட நபர்களின் வாழ்க்கையை மேம்படுத்தவும் மறுவாழ்வு மையங்கள் உதவும்.

தண்டுவட காயம் ஏற்பட்டவர்களில் சிலரின் வாழ்நாள் குறைவாக இருப்பதற்குக் காரணம் சில பின்விளைவுகள்தாம். அடிக்கடி ஏற்படும் சிறுநீரகத் தொற்று, படுக்கைப் புண் என இவர்களின் வாழ்க்கை ‘வேற மாதிரி’ இருக்கும். அதே நேரத்தில் உரிய மறுவாழ்வு சிகிச்சை எடுத்துக்கொள்வதால், விபத்துக்குப் பிறகு 30 முதல் 50 ஆண்டுகள் வரை வீல் சேரிலேயே வாழ்கிறவர்களும் இருக்கிறார்கள். அவர்களால் தங்கள் வாழ்க்கை முறையை மாற்றியமைக்க முடிந்ததால்தான் இது சாத்தியமானது. ஆனால், பொருளாதார வசதியும், பராமரிக்கும் வசதியுள்ள உறவுகளும் இல்லாதவர்களுக்கு இது சாத்தியமில்லை.

வேண்டும் விழிப்புணர்வு

முதலில் தண்டுவட காயங்கள் ஏற்படாமல் தற்காத்துக்கொள்ள மக்களுக்கு விழிப்புணர்வு வேண்டும். பொதுவாகவே எல்லா இடங்களிலும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். குளியலறையில் வயதானவர்கள்கூட வழுக்கி விழாதவாறு பிடிமான வசதி செய்யப்பட வேண்டும். வாகனங்களில் செல்வோர் பாதுகாப்பாகவும் கவனமாகவும் விதிகளை மதித்தும் செல்ல வேண்டும். பெயின்டர்ஸ் போன்ற கட்டுமான தளங்களில் வேலை செய்வோர் பாதுகாப்பு உபகரணங்களை கட்டாயமாகப் பயன்படுத்துவது அந்த கட்டுமான நிறுவனத்தின் பொறுப்பாக இருக்க வேண்டும்.

அடுத்து மருத்துவர்களுக்கு மத்தியிலும் விழிப்புணர்வு அவசியம். தண்டுவடத்தில் அடிபட்டிருந்தால் தாமதிக்காமல் அவசர சிகிச்சை வசதியுள்ள மருத்துவமனைக்கு முறைப்படி அனுப்பிவிட வேண்டும். உடனடி சிகிச்சையால் பல பின்விளைவுகளைத் தவிர்க்க முடியும்.

மூன்றாவதாக இதுபோன்ற பாதிப்புக்கு ஆளானவர்களுக்கான வசதி வாய்ப்புகளை அரசாங்கம் ஏற்படுத்தித் தர வேண்டும். அலுவலகங்கள், மருத்துவமனைகள், கழிப்பறைகள் மற்றும் பிற பொது இடங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கான நுழைதலும் பயன்பாடும் எளிதாக இருக்க வேண்டும். பொது போக்குவரத்திலும் இந்த வசதி செய்துதரப்பட வேண்டும். இவர்களுக்கான வேலைவாய்ப்புகளும் உருவாக்கப்பட வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு சிறந்த முதுகெலும்பு அறுவை சிகிச்சை நிபுணரை  அணுகவும்

English Version of the Blog: Prevention of Spinal Cord Injuries

டாக்டர் G. பாலமுரளி
MBBS, MRCS (Ed), MD (UK), FRCS
முதுகெலும்பு மற்றும் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்
காவேரி மருத்துவமனை, சென்னை

 

Kauvery Hospital is globally known for its multidisciplinary services at all its Centers of Excellence, and for its comprehensive, Avant-Grade technology, especially in diagnostics and remedial care in heart diseases, transplantation, vascular and neurosciences medicine. Located in the heart of Trichy (Tennur, Royal Road and Alexandria Road (Cantonment), Chennai, Hosur, Salem, Tirunelveli and Bengaluru, the hospital also renders adult and pediatric trauma care.

Chennai – 044 4000 6000 • Trichy – Cantonment – 0431 4077777 • Trichy – Heartcity – 0431 4003500 • Trichy – Tennur – 0431 4022555 • Hosur – 04344 272727 • Salem – 0427 2677777 • Tirunelveli – 0462 4006000 • Bengaluru – 080 6801 6801

  Categories:
write a comment

1 Comment

  1. Sundar T
    February 01, 11:17 #1 Sundar T

    A momentary distraction can even lead to permanent disability. Thus it is better to wear helmets while driving.

    Reply to this comment

Add a Comment

Your data will be safe! Your e-mail address will not be published. Other data you enter will not be shared with any third party.
All * fields are required.