மனதை நலமாக வைத்து கொள்ளும் வழிகள்!

by admin | April 11, 2023 3:38 am

மன அழுத்தம் (Depression) அல்லது மனப் பதற்றம் (Anxiety) ஏற்பட என்ன காரணங்கள்? 

மன அழுத்தம் பாரம்பரிய வழியாகவும், மரபணுக்கள் மூலமாகவும் வரக் கூடியது. சில நேரம் சூழல் மற்றும் வாழ்க்கையில் ஏற்படும் கடினமான சூழ்நிலை காரணமாக மன அழுத்தம் ஏற்படும். கடினமான சூழ்நிலையை ஏற்றுக்கொள்ளும் தன்மை அல்லது சிக்கல்களைத் தீர்க்கும் திறன் குறையும்போதும் மனநல பிரச்சினை ஏற்படும். மூளை நரம்பியல் நோய், சிறுநீரகப் பிரச்சினை, நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு மன அழுத்தம் மற்றும் மனப் பதற்றம் ஏற்படும் சாத்தியம் உள்ளது.

மனநல பிரச்சினைகளின் அறிகுறிகள் என்னென்ன? 

உணர்வு சார்ந்த அறிகுறிகள்

சோகமாகவும், மனதளவில் சோர்வாகவும், குற்றவுணர்வு உள்ளவர்களாகவும் தோன்றும். அழுதல், நம்பிக்கையின்மை, நாட்டமின்மை, அதிக நேரம் உறங்குதல் அல்லது மிகவும் குறைவான நேரமே உறங்குதல், அதிக பசி அல்லது பசியின்மை, குழப்பம், மறதி என உணர்வு சார்ந்த அறிகுறிகள் தென்படும்.

உடல் சார்ந்த அறிகுறிகள்

உடல் வலி, சோர்வு, அஜீரணக் கோளாறு, செரிமான பிரச்சினைகள், வயிறு எரிச்சல், அதிக அளவில் சிறுநீர் மற்றும் மலம் கழித்தல், உடலில் சில இடங்களில் மரத்துப் போனது போலத் தோன்றுதல் ஆகிய அறிகுறிகள் இருக்கக்கூடும்.

புலன் சார்ந்த அறிகுறிகள்

தனிமையில் சிரித்தல், முணுமுணுத்தல், மற்றவர்களைச் சந்தேகப்படுதல் என புலன் சார்ந்த சில அறிகுறிகளும் ஏற்படலாம். இதனை புலன் சார் நோய் என்பதுண்டு.

மன அழுத்தம் மற்றும் மன பதற்றத்தால் உடலில் ஏற்படும் பிரச்சினைகள் என்ன? 

உடல் வலி, தலைவலி, உறக்கம் பாதிக்கப்படுதல், அதிக அளவில் பசி எடுத்தல் அல்லது பசியின்மை, ஏப்பம், செரிமான பிரச்சினைகள், அதிக அளவில் சிறுநீர் கழித்தல், உடலில் எரிச்சல் மற்றும் குத்துதல் போன்ற பிரச்சினைகள் இருக்கும்.

மன அழுத்தம் அல்லது மனப் பதற்றத்தால் ஏற்படும் தூக்கமின்மை பற்றி… 

ஆரம்ப கட்டத்தில் தூக்கம் பாதிக்கப்படும். ஒரு சிலருக்கு தூக்கம் குறைவாக இருக்கும். குறைவான தூக்கம் உள்ளவர்களுக்கு படுத்தவுடன் தூக்கம் வராது (initial insomnia). அதிலும் சிலர் படுத்தவுடன் தூங்கி விடுவார்கள், ஆனால் தூக்கத்துக்கு நடுவில் கண் விழித்து விடுவார்கள். பிறகு நெடுநேரம் கழித்தே மீண்டும் உறங்குவார்கள். இதற்கு மிடில் இன்சோம்னியா (Middle Insomnia) என்று பெயர்.

சிலர் சரியான நேரத்தில் உறங்கி, காலையில் வழக்கத்துக்கு மாறாக அதிகாலையிலேயே (3 மணிக்குள் எழுந்து விடுவார்கள். இதற்கு லேட் இன்சோம்னியா (Late Insomnia) என்று பெயர். சிலருக்கு தூக்கம் அதிக அளவில் இருக்கும். விடிய விடிய தூங்கிக் கொண்டே இருக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றும்.

மன அழுத்தம் வராமல் தடுப்பது எப்படி? 

மனதை நலமாக வைத்துக் கொள்ளும் வழிமுறைகள் என்னென்ன? 

நம்மை எப்போதும் சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ள வேண்டும். அவை எந்த செயலாக இருந்தாலும் சரி, நம்மை ஊக்கப்படுத்தும் செயலை, எப்போதும் நடைமுறையில் வைத்துக் கொள்ள வேண்டும். அவை சமையல், விளையாட்டு, கோலம், இசை, உடற்பயிற்சி என இருக்கலாம். இவை, நம் மனதை நலமாகவும், சுறுசுறுப்பாகவும் வைத்துக் கொள்ள உதவும். மேலும் சிறிது நேரம் ஒதுக்கி மற்றவர்களிடம் பேசலாம். இவை மனதிற்கு நிறைவாக இருக்கும்.

மனநலப் பாதிப்பு அதிகரிக்கும் போது செய்ய வேண்டியது என்ன

மன அழுத்தம் அதிகமாகி தற்கொலை எண்ணம், கோபத்தில் பொருட்களை உடைப்பது, எரிச்சலாவது, பதறுவது என தாங்கிக் கொள்ள முடியாத அளவுக்குப் போகும்போது, உடனடியாக மனநல மருத்துவரை அணுக வேண்டும். மனநல மருத்துவர்கள் பாதிப்புக்கேற்ற சிகிச்சை அளித்து சரிசெய்து விடுவார்கள்.

மனநல பிரச்சினைகளின் பின்விளைவுகளும் அவற்றுக்கான மருத்துவமும் பற்றி…

மருத்துவ விஞ்ஞானத்தின் வளர்ச்சி காரணமாக, இப்போது மன அழுத்தம், மனச் சிதைவு, மனப்பதற்றம் என அனைத்துக்கும் மருத்துவம் உண்டு. மருத்துவத்தைச் சரியான முறையில் எடுத்துக் கொண்டு, அவர்களுடைய அன்றாட செயல்களை செய்யலாம். தொழில் அல்லது பணியை நல்ல முறையில் மேற்கொள்ளலாம்.

இரவில் சரியான நேரத்தில் தூக்கம் வருவதற்கும் மருந்துகள் இருக்கின்றன. மருத்துவர் பரிந்துரையுடன் அவற்றை எடுத்துக் கொள்ளலாம்.

மன அழுத்தம், மனச் சிதைவு, மனப் பதற்றப் பிரச்சினைகளுக்கு ஆலோசனை (Counseling) என்ற மற்றொரு வழியும் உண்டு. சில பிரச்சினைகளை மருந்தால் குறைத்துவிட்டு, பிறகு அவர்களுக்கு ஆலோசனை வழங்க வேண்டும். அந்த ஆலோசனையை ஏற்றுக்கொள்ளும் தன்மை ஏற்பட்டால், பிரச்சினைக்கு எவ்வாறு தீர்வு காண வேண்டும் என்பதையும் பரிந்துரைக்கலாம். ஆலோசனையை ஏற்றுக் கொண்டாலே அவர்கள் மன ஆரோக்கியத்துடன் இருப்பார்கள்.

மனநல மருத்துவர் அல்லது மனநல ஆலோசகரை அணுகும்போது ஏற்படும் தடைகளைத் தாண்டுவது எப்படி

‘நான் என் மனநலப் பிரச்சினைக்காக, ஒரு மனநல மருத்துவரை அணுகும்போது, என்னைச் சுற்றியுள்ள மக்கள் அல்லது சமூகத்தினர் என்ன நினைப்பார்கள்?’ என்றே பலரும் தயக்கம் கொள்வார்கள். ‘மருத்துவரை’ அணுகி அவர் கொடுக்கும் மாத்திரைகளை உட்கொண்டால் சோம்பேறித்தனமாக, தூங்கிக்கொண்டே இருப்போம். எந்த செயலையும் செய்ய முடியாது. அவை நமக்கு உடல் ரீதியாக பாதிப்பை ஏற்படுத்தும்’ என்கிற தவறான சிந்தனையில் மனநல மருத்துவர்[1] அல்லது மனநல ஆலோசகரை அணுகவும் தயக்கம் காட்டுகிறார்கள். இவையெல்லாம் உண்மையில்லாத வதந்திகளே. அதனால், மனம் நலமாக இருக்க மனநல மருத்துவரை அணுகுவது மிகவும் அவசியம்.

டாக்டர் சுஜாதா வேல்முருகன் MBBS, DPM
மனநல மருத்துவர் காவேரி மருத்துவமனை, சென்னை.

 

Kauvery Hospital is globally known for its multidisciplinary services at all its Centers of Excellence, and for its comprehensive, Avant-Grade technology, especially in diagnostics and remedial care in heart diseases, transplantation, vascular and neurosciences medicine. Located in the heart of Trichy (Tennur, Royal Road and Alexandria Road (Cantonment), Chennai, Hosur, Salem, Tirunelveli and Bengaluru, the hospital also renders adult and pediatric trauma care.

Chennai – 044 4000 6000 • Trichy – Cantonment – 0431 4077777 • Trichy – Heartcity – 0431 4003500 • Trichy – Tennur – 0431 4022555 • Hosur – 04344 272727 • Salem – 0427 2677777 • Tirunelveli – 0462 4006000 • Bengaluru – 080 6801 6801

Endnotes:
  1. மனநல மருத்துவர்: https://www.kauveryhospital.com/doctors/chennai/psychiatry

Source URL: https://kauveryhospital.com/blog/tamil-articles/ways-to-keep-your-mind-healthy/