ஆர்த்ரைட்டிஸ் பிரச்சினைகளுக்கு என்னதான் தீர்வு?

ஆர்த்ரைட்டிஸ் பிரச்சினைகளுக்கு என்னதான் தீர்வு?
June 04 11:26 2024 by admin Print This Article

ஆர்த்ரைட்டிஸ் என்பது மூட்டுவலி அல்லது வீக்கம் போன்ற பிரச்னைகளைக் குறிக்கிறது. காய்ச்சல் எதனால் வருகிறது என்று காரணம் அறிவதுபோலவே, மூட்டுவலிக்கு என்ன காரணம் என்று கண்டுபிடிக்க வேண்டும். அதன் பின்னரே அதற்கேற்ற சிகிச்சையை அளிக்க வேண்டும்.

அடிபடாமல் வரும் மூட்டுவலியை பொதுவாக ‘ஆர்த்ரைட்டிஸ்’ என்று சொல்கிறோம். மூட்டுவலியை இரண்டு வகைகளாகப் பிரித்துக்கொள்ளலாம். ஒன்று வயதாகும்போது, மூட்டுத்தேய்மானத்தால் வருவது. இதை ஆஸ்டியோ ஆர்த்ரைட்டிஸ் என்று சொல்வோம். மூட்டு அழற்சி அல்லது தேய்மானம் என்றும் சொல்லலாம். மூட்டு எலும்புக்கு மத்தியில் உள்ள குஷன் மாதிரி உள்ள பகுதி தேய்வதால், அதிக நேரம் நிற்கும்போது, நடக்கும்போது, படி ஏறும்போது, தரையில் உட்கார்ந்து எழும்போது, இந்திய பாணி கழிவறையைப் பயன்படுத்தி எழும்போது இந்த மூட்டு வலி தெரியும். வயதானால் எப்படி முடி நரைக்கிறதோ அதுபோல ஆஸ்டியோ ஆர்த்ரைட்டிஸ் என்கிற மூட்டுவலி பிரச்னையும் வரக்கூடும்.

இரண்டாவது வகை இன்ஃபிளமேட்டரி ஆர்த்ரைட்டிஸ். இவ்வகையில் பொதுவான நோயாகக் காணப்படுவது ரூமட்டாய்டு ஆர்த்ரைட்டிஸ் என்கிற முடக்கு வாதம். முடக்குவாதம். பொதுவாக இது நடுத்தர வயதினருக்கே அதிக அளவில் வரும். மரபு வழியாகவோ, சுற்றுச்சூழல் காரணிகளாலோ, நோய்த் தொற்று அல்லது சிக்கன்குனியா, கொரோனா போன்ற பிற பிரச்னைகளாலும் இந்த வகை மூட்டுப் பிரச்னை வரலாம். தூங்கி எழும்போது கை கால்களிலுள்ள சிறிய மூட்டுகளில் வீக்கமும் வலியும் இருக்கும். எழுந்து கொஞ்சம் கொஞ்சமாக நடக்கும்போது வலி குறையும். இதில் நிறைய வகைகள் இருக்கின்றன. இப்போது நீரிழிவுக் குறைபாடு போலவே முடக்குவாதமும் பொதுவான ஒரு பிரச்னையாக நூற்றில் ஒருவருக்கு இருக்கிறது.

முதுகுத்தண்டு வாதம் (Spondyloarthritis), தோல் பிரச்சினையான சோரியசிஸ் சார்ந்த ஆர்த்ரைட்டிஸ், யூரிக் அமிலம் அதிகமாக உள்ளவர்களுக்கு ஏற்படும் கௌட் பிரச்சினையும் வாதங்களின் வகைகளே. இவை ஆண்கள் மத்தியில் அதிகம். எந்த வயதினருக்கும் வரலாம்.

மூட்டுவலி பிரச்சினை எதனால் ஏற்பட்டிருக்கிறது என்பதை அறிய வேண்டும். அதற்கேற்ப தங்களுடைய வாழ்க்கை நடைமுறையை மாற்றிக்கொள்ள வேண்டும். தேய்மானம் சார்ந்த வலி இருப்பவர்களின் (ஆஸ்டியோ ஆர்த்ரைட்டிஸ்) எடை அதிகமாக இருந்தால் நிச்சயம் குறைக்க வேண்டும். நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். மூட்டைப் பலப்படுத்தும் பயிற்சி மேற்கொள்ள வேண்டும். தரையில் சம்மணமிட்டு உட்கார்வதை குறைத்துக்கொள்ள வேண்டும். மாடிப்படி ஏறி இறங்குவதை குறைத்துக்கொள்ள வேண்டும். வெஸ்டர்ன் ஸ்டைல் டாய்லெட்டைப் பயன்படுத்தலாம்.

ஆரம்பக் கட்டத்தில் இருப்பவர்களுக்கு மூட்டுக்களுக்கு ஜெல் ஊசி மூலம் வலியைக் குறைக்கலாம். தேய்மானம் அதிகமாக இருந்தால் இந்த முறை உதவாது.

முடக்குவாதத்துக்கான சிகிச்சை

அதிகமான தேய்மானம் உள்ளவர்களுக்கு கடைசிக்கட்ட வாய்ப்பு மூட்டு அறுவை சிகிச்சைதான். இதில் மருந்து என்பதற்கான பங்கு மிகவும் குறைவு. உடற்பயிற்சி,ஜெல் ஊசி கடைசி வாய்ப்பாக அறுவை சிகிச்சை ஆகியவையே உதவும்.

சிகிச்சையின் ஆரம்பக்கட்டத்தில் வலி நிவாரணியைப் பயன்படுத்த சொல்வோம். ஆனால், அதுவே முழுமையான சிகிச்சையல்ல. ஆறு மாதத்துக்கு மேல் வலி நிவாரணியோ, ஸ்டீராய்டோ எடுக்கக்கூடாது. அப்படி எடுத்தால் பக்க விளைவுகள் ஏற்படும் அபாயம் உள்ளது. இதைத் தடுக்க, தொடர் இடைவெளியில் பரிசோதனைகள் செய்ய வேண்டியது அவசியம். பரிசோதனைகளின் அடிப்படையில் ஏதேனும் பாதிப்பு இருந்தால் முன்கூட்டியே தவிர்க்க முடியும்.

தினமும் ஏழு முதல் எட்டு மணி நேரம் உறக்கம் அவசியம். உடற்பயிற்சி செய்ய வேண்டும். யோகா, தியானம் போன்றவையும் மிகவும் உதவியாக இருக்கும்.

பலரும் கேட்கும் கேள்வி… எந்த மாதிரியான உணவுப் பழக்கம் மேற்கொள்ள வேண்டும் என்பதுதான். கார்போஹைட்ரேட் குறைவாக உள்ள உணவுகளைச் சாப்பிடலாம். குறிப்பாக, இரவில் அரிசி உணவுகளைக் குறைத்துக் கொள்ளலாம். சர்க்கரை மிகுந்த உணவுகளையும் குறைத்துக்கொள்ள வேண்டும். சர்க்கரை சேர்க்கப்பட்ட பானங்களைத் தவிர்க்க வேண்டும். நொறுக்குத்தீனிகள், ஃபாஸ்ட்புட், பொரித்த உணவுகளையும் தவிர்க்க வேண்டும். எந்த அளவுக்கு காய்கறிகளையும் பழங்களையும் சேர்த்துக்கொள்கிறோமோ அந்த அளவு நல்லது. மீன் சேர்த்துக் கொள்ளலாம். உணவுப்பழக்கம், உடற்பயிற்சி, உறக்கம் போன்றவை சரியாக இருந்தால் எந்த நோயும் அவ்வளவு எளிதாக நெருங்காது.

வாழ்நாள் முழுவதும் மாத்திரை எடுத்துக்கொள்ள வேண்டுமா என்ற கேள்வி பலருக்கு எழும். ஒருவேளை நீங்கள் மூட்டுவலி பிரச்சினையை எதிர்கொள்ள்ள நேர்ந்தால் ஆரம்பத்திலேயே மருத்துவரின் ஆலோசனைபடி மாத்திரைகளையும் எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம். அப்படி முறையாக மருந்து எடுத்துக்கொள்ளும்போது இரண்டு, மூன்று வருடங்களில் மாத்திரைகளிலிருந்து விடுபட வாய்ப்புண்டு. அதாவது மருந்து எடுத்துக்கொள்பவர்களில் நான்கில் ஒருவருக்கு இப்படிச் செய்ய முடியும்.

ஒரு வேளை சிகிச்சை எடுக்காமல் இருந்தால் என்னவாகும்?

இது மூட்டு சம்பந்தப்பட்ட பிரச்னை மட்டுமல்ல, ரத்தம் சம்பந்தப்பட்ட பிரச்னையும்கூட. சிகிச்சை எடுத்துக்கொள்ளாவிட்டால் மூட்டுத் தேய்மானமாகி திரும்ப பழைய நிலைக்குத் திரும்ப முடியாத நிலை ஏற்படும். கை, கால்கள் வாதத்தினால் பாதிப்படையும்.அவற்றையும் பழைய நிலைக்கு கொண்டுவர முடியாது.ஆர்த்ரைட்டிஸைக் கட்டுப்படுத்தவில்லை என்றால் கண்களைப் பாதிக்கும். இதயத்தையும் நுரையீரலையும்கூட பாதிக்கும். மூட்டுக்களிடையே எப்படி வீக்கம் இருக்கிறதோ அப்படி இதயத்துக்கு செல்லும் ரத்தக்குழாயிலும் வீக்கம் ஏற்படும் அபாயம் இருக்கிறது. ரத்த சர்க்கரையைக் கட்டுக்குள் வைக்காமல் இருக்கும்போது மாரடைப்பு ஏற்படும் அபாயம் இருப்பதுபோலவே, ரூமட்டாய்டு ஆர்த்ரைட்டிஸ் இருப்பவர்கள் முறையான சிகிச்சை எடுத்துக்கொள்ளாமல் இருக்கும்போது, இதயப் பாதிப்பு ஏற்படக் கூடும்.

அதனால்,மூட்டு இணைப்புகள் பாதிப்படையாமல் இருக்கவும், மற்ற உறுப்புகள் பாதிப்படையாமல் இருக்கவும் சிகிச்சை எடுத்துக்கொள்வது அவசியம்.

பொதுவாக, மூட்டுவலி ஆரம்பக்கட்டத்தில் இருப்பவர்கள் உடற்பயிற்சி செய்வது முக்கியம்.

சிலர் மூட்டு நன்கு தேய்ந்து அதீத வலியுடன் வருவார்கள். ஆயிரம் பேரில் 5 அல்லது 6 நபர்களைப் பாதிக்கக்கூடிய முதுகுத்தண்டுவாதத்தால் சிலர் முதுகு வளைந்து வருவார்கள். அப்படி வருபவர்களுக்கு அந்தப் பகுதியை பழைய நிலைக்குக் கொண்டு வர பிசியோதெரபி எடுத்துக்கொள்ள ஆலோசனை வழங்குவோம். முதுகை நிமிர்த்தி வளைப்பது, சுவாசப்பயிற்சி மேற்கொள்வது, நீச்சல் பயிற்சி, சைக்கிளிங் போன்றவை பெரும் உதவியாக இருக்கும். அவர்கள் உடற்பயிற்சி செய்யாமல் வெறுமனே மாத்திரைகள் எடுத்துக்கொள்ளாதீர்கள் என்றும் வலியுறுத்துவோம். ஏனெனில், உடற்பயிற்சி செய்யும்போது குணமாகும் தன்மையும் அதிகரிக்கும்.

ஆர்த்ரைட்டிஸில் நூறுக்கும் மேற்பட்ட வகைகள் உள்ளன. கீல்வாதத்தின் வகையைப் பொறுத்து அறிகுறிகள் மாறுபடும். இதுவரை காரணங்கள் அறியப்படாத பல வகை மூட்டுவலிகளும் உள்ளன.

Kauvery Hospital is globally known for its multidisciplinary services at all its Centers of Excellence, and for its comprehensive, Avant-Grade technology, especially in diagnostics and remedial care in heart diseases, transplantation, vascular and neurosciences medicine. Located in the heart of Trichy (Tennur, Royal Road and Alexandria Road (Cantonment), Chennai (Alwarpet & Vadapalani), Hosur, Salem, Tirunelveli and Bengaluru, the hospital also renders adult and pediatric trauma care.

Chennai Alwarpet – 044 4000 6000 •  Chennai Vadapalani – 044 4000 6000 • Trichy – Cantonment – 0431 4077777 • Trichy – Heartcity – 0431 4003500 • Trichy – Tennur – 0431 4022555 • Hosur – 04344 272727 • Salem – 0427 2677777 • Tirunelveli – 0462 4006000 • Bengaluru – 080 6801 6801

  Categories:
write a comment

Comments

No Comments Yet!

You can be the one to start a conversation.

Add a Comment

Your data will be safe! Your e-mail address will not be published. Other data you enter will not be shared with any third party.
All * fields are required.