வலிப்பு நோய் என்றால் என்ன? வலிப்பு நோய் எப்படி வருகிறது? வலிப்பு நோயில் பல வகைகள் உண்டா?

வலிப்பு நோய் என்றால் என்ன? வலிப்பு நோய் எப்படி வருகிறது? வலிப்பு நோயில் பல வகைகள் உண்டா?
May 18 07:13 2023 by admin Print This Article

வலிப்பு நோய் என்றால் என்ன

மூளை நரம்புகளில் இருந்து புறப்படும் மின்சாரமானது சரியாக வேலை செய்யாமல், தவறாக செய்யப்படும் போது ஏற்படும் பாதிப்பே வலிப்பு நோய். இதனால், சிலருக்கு கை-கால் செயல்திறன் குறைபாடு, சிலருக்கு மரத்துப் போதல், ஒரு சிலருக்கு சுய நினைவு இல்லாமல் இருப்பது போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும். வலிப்பு நோயை கிராமப்பகுதிகளில் காக்கா வலிப்பு என்பார்கள். கை-கால் இழுத்துக்கொண்டு, வாயில் நுரை தள்ளி, சுயநினைவை இழந்துவிடுவார்கள். இதுதான் பொதுவாக வரக்கூடிய வலிப்பு நோய். ஒரு சிலருக்கு சுயநினைவை இழக்காமலும் வலிப்பு வரும். சிலருக்கு மரத்துப்போகும் தன்மை, லேசான கைகாலில் துடிப்பு ஏற்படுவது போன்றும் வலிப்பு வர வாய்ப்புள்ளது. சிலருக்கு உதடுகள் சுழிப்பது, உதடுகளை கடித்துக்கொள்வது, செய்த செயலையே மறுபடியும் மறுபடியும் செய்வது, எந்த செயலையும் செய்யாமல் வெறித்துப்பார்த்து கொண்டிருப்பது மற்றும் கண்ணில் பூச்சி பறப்பது போன்று இருப்பதும் வலிப்பு நோய்க்கான அறிகுறிகளாக இருக்கலாம்.

வலிப்பு நோய் ஏற்பட காரணங்கள் என்னென்ன

குடும்ப உறுப்பினர்களில் யாருக்கேனும் ஒருவருக்கு வலிப்பு நோய் இருக்கலாம். மரபுவழியாகக் கூட வலிப்பு நோய் வரலாம். குடும்பத்தில் யாருக்கும் வலிப்பு நோய் இல்லாமல் இருந்தாலும் கூட இயல்பாகவே வலிப்பு நோய் வரும். ஒரு சிலருக்கு மூளைக் காய்ச்சல் வந்தாலோ, பக்கவாதம் வந்தாலோ வலிப்பு நோய் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. தலையில் பலமாக அடிப்பட்டாலோ, அறுவை சிகிச்சை செய்து கொண்டாலோ கூட வலிப்பு நோய் வரலாம். மூளையில் உள்ள கட்டிகளாலோ, மூளையில் ஏற்படும் ரத்தக் கசிவினாலோ கூட வலிப்பு நோய் வரக்கூடும். தொடர் குடிப்பழக்கம் உள்ளவர்களின் மூளை நரம்புகளில் ரத்த ஓட்டம் உறைவதாலும் வலிப்பு வரலாம்.

 

சர்க்கரை நோயாளிக்கு வலிப்பு நோய் வர வாய்ப்புள்ளதா?

உடலில் சர்க்கரையின் அளவு குறையும் போது ஒரு சிலருக்கு வலிப்பு வர வாய்ப்புள்ளது. அத்தகைய தருணங்களில் உடலின் சர்க்கரை அளவை சம அளவுக்கு எடுத்து வரும் போது வலிப்பு வராமல் தடுக்கலாம்.

வலிப்பு நோய்க்கு அறுவைசிகிச்சை முறைகள் உள்ளனவா

ஒரு சில வலிப்பு நோய்களுக்கு அறுவைசிகிச்சை முறைகள் உள்ளன. மூளையில் ஏற்படும் கட்டி, அதனால் ஏற்படும் வலிப்பு நோயை அறுவை சிகிச்சை மூலம் குணப்படுத்தலாம். ஒரு சிலருக்கு மூளையில் ஏற்படும் ரத்த முடிச்சுகளாலும் வலிப்பு வரலாம். அந்த ரத்த முடிச்சுகளை அகற்றுவதன் மூலம் வலிப்பு வராமல் தடுக்க முடியும். உரிய மருந்துகளைச் சரியாக உட்கொண்டும் வலிப்பு நோய் கட்டுக் கடங்காமல் வரும் பட்சத்தில், அவர்களுக்கு அறுவைசிகிச்சை செய்து வலிப்பு வரும் தன்மையைக் குறைக்க வாய்ப்புள்ளது. ஒரு சிலருக்கு மூளையின் ஒரு சில பகுதிகளில் வளர்ச்சி மாறுபட்டு இருப்பதாலும் வலிப்பு வரும். இதற்கும் அறுவைசிகிச்சை செய்து மீண்டும் வலிப்பு வராமல் தடுக்கலாம்.

வலிப்பு நோய் இருப்பவர்கள் இயல்பான வாழ்க்கை வாழ முடியாதா

வலிப்பு நோய் இருப்பவர்கள் மற்றவர்களைப் போல இயல்பான வாழ்க்கை வாழ முடியும். இதற்கு சில தற்காப்பு முறைகளை கடைப்பிடிக்க வேண்டியது அவசியம். இதில் முதன்மையானது, வலிப்பு நோய் பாதிப்பு உள்ளவர்கள் தனியாக இரண்டு சக்கர அல்லது நான்கு சக்கர வாகனத்தை இயக்குவதை முடிந்தளவுக்கு தவிர்ப்பது நல்லது. வெளியூர் பயணம் செய்பவர்கள் தவறாமல் மருந்தை எடுத்துச் செல்ல வேண்டும். ஒவ்வொரு நாளும் மருந்தை உட்கொள்ள வேண்டும். அதிக தொலைவுக்குப் பயணம் செய்வதை குறைத்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு நாளும் ஏழு மணி நேரம் சீரான தூக்கம் வேண்டும். உரிய நேரத்தில் உணவு எடுத்து கொள்வதையும், மருந்து சாப்பிடுவதையும் பழக்கமாக  மாற்றிக் கொள்ள வேண்டும்.  இவ்வாறு சரியான முறையில் உணவையும் மருந்தையும் எடுத்துக்கொண்டு, சரியான தூக்கமும் இருந்தால் மீண்டும் வலிப்பு வராமல் தடுக்கலாம்.

 

வலிப்பு நோய் இருப்பவர்கள் தொடர்ந்து மருந்து உட்கொள்ள வேண்டுமா

வலிப்பு நோய் இருப்பவர்களில் ஒரு சிலருக்கு இரண்டு வருடங்கள் மருந்து எடுத்துக் கொண்டால் கூட போதுமானது. ஒரு சிலருக்கு வாழ்நாள் முழுவதும் மருந்து எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கும். ஒரு சிலர் மருந்து உட்கொள்ளாமல் நிறுத்தும் போது, மீண்டும் வலிப்பு வந்தால், அதனால் கை- கால் செயல்திறன் பாதிப்பு, கண் நரம்பு பாதிப்பு, கீழே விழுந்து அடிபடுவதால் உயிருக்கே ஆபத்து வரலாம். அடிக்கடி வலிப்பு வந்தால் சம்பந்தப்பட்டவர்களின் அன்றாட வாழ்க்கை மட்டுமல்ல, சம்பந்தப்பட்ட குடும்பத்தினரின் வாழ்க்கையும் பாதிக்கப்படும்.

 

யாருக்கேனும் திடீரென வலிப்பு வந்தால் நாம் என்ன செய்ய வேண்டும்

வலிப்பு வரும்போது, வலிப்பு பாதிப்பு உள்ளவர்களிடம் இரும்புப் பொருட்கள், கூரான பொருட்கள் போன்றவற்றைத் தரக்கூடாது… பதற்றப்படக்கூடாது. மூச்சுவிடுவதற்கு ஏதுவாக நல்ல காற்று வசதி கிடைக்க வழி செய்ய வேண்டும். ஒருக்களித்து படுக்க வைக்க வேண்டும். சட்டை அணிந்திருந்தால் இரண்டு பொத்தான்களை கழற்றி காற்றோட்ட  வசதியை ஏற்படுத்த வேண்டும். சுற்றி இறுக்கமாக இருப்பதைத் தவிர்க்க வேண்டும். வாந்தி எடுக்க வாய்ப்பிருப்பதால் ஒருக்களித்து படுக்க வைப்பதன் மூலம் அதைத் தடுக்கலாம். இரும்பு போன்ற ஆயுதங்களை கொடுப்பதை விட்டுவிட்டு 108 என்ற எண்ணுக்குத் தொடர்பு கொண்டு முதலுதவிக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.

டாக்டர் கே.மதுசூதன் MBBS., MS., MCh
நரம்பியல் சிறப்பு மருத்துவர்
காவேரி மருத்துவமனை
திருச்சி கண்டோன்மென்ட்

 

Kauvery Hospital is globally known for its multidisciplinary services at all its Centers of Excellence, and for its comprehensive, Avant-Grade technology, especially in diagnostics and remedial care in heart diseases, transplantation, vascular and neurosciences medicine. Located in the heart of Trichy (Tennur, Royal Road and Alexandria Road (Cantonment), Chennai, Hosur, Salem, Tirunelveli and Bengaluru, the hospital also renders adult and pediatric trauma care.

Chennai – 044 4000 6000 • Trichy – Cantonment – 0431 4077777 • Trichy – Heartcity – 0431 4003500 • Trichy – Tennur – 0431 4022555 • Hosur – 04344 272727 • Salem – 0427 2677777 • Tirunelveli – 0462 4006000 • Bengaluru – 080 6801 6801

  Categories:
write a comment

1 Comment

  1. Sakthiraj D
    July 31, 06:31 #1 Sakthiraj D

    I never knew that there were surgical treatment options for some epilepsy.

    Reply to this comment

Add a Comment

Your data will be safe! Your e-mail address will not be published. Other data you enter will not be shared with any third party.
All * fields are required.